எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் மூவாயிரத்து 100 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று வரை மூவாயிரத்து 100 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
வேட்பு மனுத்தாக்கல் செய்யும் கட்சிகளும் வேட்பாளர்களும் தமது சொத்து விபரங்களை சமர்ப்பித்திருத்தல் கட்டாயமானதாகும்.
அது இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு சமர்ப்பிக்காத கட்சிகள் மற்றும் வேட்பாளர்களது விபரங்களை இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.
இதேவேளை, கட்டுப்பணம் செலுத்திவிட்டு வேட்புமனுத் தாக்கல் செய்யாத அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பணம் மீள கையளிக்கப்படும். அவ்வாறான ஏற்பாட்டுக்கு குறிப்பிட்ட காலம் எடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.



