161வது பொலிஸ் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு இன்று கொழும்பிலும் இடம்பெற்றது.
பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவின் தலைமையில் பம்பலப்பிட்டி பொலிஸ் களப்படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெற்றது.
பொலிசாரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதுடன், பொலிஸ் மாவீரர் நினைவுத்தூபிக்கு மரியாதை செலுத்திய பின்னர், பதில் பொலிஸ் மா அதிபர் போர்வீரர் நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
யுத்தம் மற்றும் சட்டம் ஒழுங்குப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் மற்றும் முற்றாக அங்கவீனமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் வருகைதந்தமையை கௌரவமாக கருதி அவர்கள் அனைவருக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் ரொக்கப்பரிசுகளை வழங்கினார்.
அத்துடன், பொலிஸ் மாவீரர் குடும்பங்களின் உறவினர்களிடம் பதில் பொலிஸ் மா அதிபர் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர்கள். அங்கவீனமுற்ற பொலிஸ் மாவீரர்கள் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



