கண்டி தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவியை கடத்திய சந்தேக நபர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சர் புத்திக்க மனதுங்க கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள ஒலிப்பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
கண்டி தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் குறித்த வேனை ஓட்டிய நபர் நேற்று பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதன் போது பொலிசார் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் மீட்டுள்ளனர். அதனை அடுத்து அவரின் கையடக்க தொலைபேசி இலக்கத்தை மையமாக கொண்டு பிரதான சந்தேக நபரை தேடும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது சந்தேக நபர் அம்பாறை பிரதேசத்தில் மறைந்திருப்பதான தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது. அதற்கமைய பொலிஸ் குழுக்களினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.



